மது மனிதனை மிருகமாக்கும்! உடனே மது விலக்கை அமல்படுத்த அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

0
132
Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today
Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

மது மனிதனை மிருகமாக்கும்! உடனே மது விலக்கை அமல்படுத்த அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் மதுபோதையில் தாயை தாக்க முயன்ற போது, தடுக்க வந்த அண்ணனை தம்பி கத்தியால் குத்தி கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. மது மனிதனை மிருகமாக்கும் என்பதற்கு இதை விட வேதனையான எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது என கூறியுள்ளார்.

மேலும், கொலை செய்த தம்பிக்கு 17 வயது தான். அவரது தாய், தந்தையர் இருவரும் ஆசிரியர்கள். 12-ஆம் வகுப்பு பயிலும் அவர் நன்றாக படிக்கக் கூடியவர் தான். ஆனால், இத்தனை நல்ல விஷயங்களையும் சிதைத்து அந்த சிறுவனை கொலைகாரனாக்கியிருக்கிறது மதுபோதை. அப்படியானால் அது எவ்வளவு கொடியது என கேள்வி எழுப்பினார்.

மனிதன் இயல்பான நிலையில் தாயை தாக்க முனைய மாட்டான், அண்ணனை கொலை செய்ய முயலமாட்டான். ஆனால், பதின்வயதை தாண்டாத சிறுவன் இத்தகைய கொடூரங்களை நிகழ்த்தியிருப்பதற்கு காரணம் அவனை இயக்கிய மது அரக்கன் தான். அந்த சிறுவன் கஞ்சாவுக்கும் அடிமை எனக் கூறப்படுகிறது.

இது போன்ற கொடிய நிகழ்வுகள் வாரம் ஒன்று நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கான தீர்வு என்ன? என்பது அரசுக்கும் தெரியும். எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூடி, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.