அயோத்தி நில ஊழல் வழக்கு! விசாரணையை தொடங்கிய ஆணையம்!

0
78

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் பகுதியில் இருந்த பாபர் மசூதியை பல வருடங்களுக்கு முன்னர் கரசேவைகள் இயக்கம் இடித்து தரைமட்டமாக்கியது. அன்றிலிருந்து அங்கே இது மிகப் பெரிய சர்ச்சையாக கிளம்பத் தொடங்கியது.

அதோடு அந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய இந்துத்துவா அமைப்புகள் ராமர் பிறந்த அயோத்தியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று பல காலமாக கோரிக்கை எழுப்பி வந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதோடு இடிக்கப்பட்ட பாபர் மசூதியை கட்டிக் கொள்வதற்காக ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இந்த சூழ்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் இடத்தை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் நிலங்களை ஒரு அறக்கட்டளை நிர்வாகம் வாங்கியிருந்தது. ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்ததை அடுத்து அந்த அரக்கட்டளையிடமிருந்து அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும், அவர்களுடைய உறவினர்களும், நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கியதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.

இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார் சிறப்பு செயலாளர் ராதேஷ்யாம் மிஸ்ரா, விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் மாநில அரசு இந்த விசாரணையை ஆரம்பித்து விட்டதாக கூடுதல் தலைமைச் செயலாளர் மனோஜ்குமார் சிங் நேற்று கூறியிருக்கிறார். விசாரணை முடிவுகள் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.