பள்ளிப்படிப்பை கைவிடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! பள்ளிக் கல்வித் துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

0
70

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் எட்டாம் வகுப்புடன் படிப்பை கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சியடைந்திருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் பள்ளி இறுதி தேர்வு முடிவடைந்தவுடன் தேர்ச்சி பெரும் மாணவர்களில் உயர் வகுப்பில் இணைந்தோரின் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வு செய்யப்படும். அதன் அடிப்படையில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் படிப்பை தொடர்கிறார்களா? என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் தென்காசி, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 5ம் வகுப்புடன் படிப்பை முடிப்போர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதாவது 6ம் வகுப்பில் சேராமல் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.

சென்னை, திண்டுக்கல், கடலூர் போன்ற மாவட்டங்களில் எட்டாம் வகுப்பு உடன் படிப்பை கை விடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதாவது 10ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாமல் பல மாணவர்கள் இடைநிற்றல் ஆவதாக தெரிய வந்துள்ளது.

இதேபோன்று தென்காசி, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் எட்டாம் வகுப்புடன் படிப்பை கைவிடுவதும் தெரியவந்துள்ளது.

கரூர் வேலூர் திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் 10 ம் வகுப்பு முடித்து பிளஸ் 1 சேராமல் படிப்பை கைவிடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சென்னை, நாமக்கல், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் அரசு பள்ளியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையும் முந்தைய ஆண்டுகளை விட குறைந்திருக்கிறது.

பெரம்பலூர், திருப்பத்தூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையே நடைபெறவில்லை.

ஆகவே பல அரசு பள்ளிகளில் சில வகுப்புகள் மாணவர்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு தகவல்கள் அனைத்தும் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவுபடி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.