கூட்டணி தொகுதி பங்கீட்டில் வேகமெடுக்கும் அதிமுக! நிதானமான பாஜக!

0
111

தமிழகத்தில் மொத்தம் இருக்கின்ற 234 தொகுதிகளில் 150 தொகுதிகளில் தன்வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக முடிவெடுத்திருப்பதாக தெரிகின்றது. மீதம் இருக்கின்ற 84 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்க அதிமுக தரப்பு திட்டமிடுவதாக தெரிகிறது. அதோடு பாரதிய ஜனதாவிற்கு 38 தொகுதிகளை ஒதுக்கி தர ஆளும் தரப்பு அதிமுக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பாஜக இந்த விஷயத்தில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

ஒருவேளை பாஜகவிற்கு 38 சீட்டுகளை தருவதற்கு அதிமுக தயார் என்றால், அது நிச்சயமாக எதிர்வரும் தேர்தலில் அதிமுகவிற்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தக்கூடும் என்று சொல்கிறார்கள். ஏனென்றால் தமிழகத்திலே பாஜகவிற்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. அதோடு 38 இடங்களில் அந்த கட்சி போட்டியிடும் என முடிவானால் , அதிமுக தோல்வியை தழுவுவது நிச்சயம் என்று சொல்கிறார்கள்.

ஆம் தமிழகத்திலே அனேக சிறுபான்மையினர் வாழ்ந்துவருகிறார்கள். அதோடு தற்பொழுது சிறுபான்மையினர் ஓட்டுக்கள் அனைத்தும் மொத்தமாக எதிர்கட்சியான திமுக வசம் இருப்பதாக சொல்கிறார்கள். அதனை தன்வச படுத்துவதற்காகவே ஒரு சில நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதுபோன்ற சமயத்தில் இப்படி சிறுபான்மையினருக்கு எதிராக கருதப்படும் பாஜகவை அதிக அளவில் தொகுதிகளை கொடுத்து தன்னுடன் வைத்துக் கொண்டால் அது நிச்சயமாக அதிமுகவிற்கு தோல்வியை தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில், அதிமுக எந்த மாதிரியான முடிவை எடுக்கும் என்றால், ஒற்றை இலக்கத்தில் பாஜகவிற்கு இடத்தை ஒதுக்கி விட்டு எப்போதும்போல இருந்துவிடும் என்றும் ஒருபக்கம் பேச்சுக்கள் எழுகின்றன.

அதோடு பாஜகவினரும் இங்கு அதிக தொகுதிகள் பெற வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறார்கள் இருந்தாலும் கூட அவர்களுக்கும் இங்கே அந்த கட்சி மிகப் பெரிய பலத்துடன் இல்லை என்பது தெரியும் என்கிறார்கள். அதன் காரணமாக அந்த கட்சியை சார்ந்தவர்களும் அதிமுகவின் முடிவிற்கு கட்டு படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.

இப்பொழுது இருக்கும் நிலையில், பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்தது மாநிலத்திலே ஒரு நல்ல நிலைக்கு வந்துவிட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருந்து வருகிறது அதன் காரணமாக தேர்தல் வரையில் எந்த மாதிரியான சலசலப்புகள் இருந்தாலும் இறுதி முடிவு அதிமுகவின் முடிவாக தான் இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுவதாக தெரிகிறது.

அதேபோல வரும் 27ம் தேதி சசிகலா விடுதலை ஆகும் காரணத்தால் ,அதற்குள்ளாக கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து அந்தந்த கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிவிட வேண்டும் என்று அதிமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தெரிகின்றது. ஏனென்றால் சசிகலா வெளியே வந்தால் நிச்சயமாக அதிமுகவிற்கு ஒரு பிரச்சனை எழும் என்று சொல்கிறார்கள்.

தேமுதிக, தாமாக போன்ற கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது அதிமுக தரப்பில் முடிவு செய்யப்பட்டு விட்டதாக ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது.