அதிமுகவின் பொதுக்குழு கூட்டம்! நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு!

0
75

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 23ம் தேதி சென்னையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த சூழ்நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்று இரு தலைவர் பொறுப்பு தவறானது, கட்சியின் பொதுச்செயலாளர் பதவி மட்டும் தான் அதிமுகவின் உண்மையான தலைமையாக இருக்க வேண்டும். இதன் காரணமாக, அவர்கள் பொதுக்குழுவை கூட்டுவதற்கான அதிகாரமில்லை.

பொதுக்குழு தொடர்பாக அவைத்தலைவர் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், அதோடு இந்தக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய சூரியமூர்த்தி மனுவை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கூட்டாக மனுவை தாக்கல் செய்தார்கள்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பொதுக்குழுவை நடத்துவதற்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், அதிமுக சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்று சூரியமூர்த்திக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகின்ற 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.