இதை செய்தால் திமுகவில் பூகம்பம் வெடிக்கும்..? அதிமுக அமைச்சரின் பரபரப்பு பேச்சு!

0
97

இதை செய்தால் திமுகவில் பூகம்பம் வெடிக்கும்..? அதிமுக அமைச்சரின் பரபரப்பு பேச்சு!

திமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு யாரை நியமித்தாலும் அக்கட்சியில் பூகம்பம் வெடிக்கும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

திமுக கட்சியின் மூத்த தலைவர் க.அன்பழகன் நெடுங்காலமாக திமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்துவந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து அவரது பூதவுடல் மீது திமுக கட்சி கொடி போர்த்தப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இவரது மறைவிற்கு பிறகு திமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்று பேச்சு எழுந்துள்ள நிலையில், அதிமுகவின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பேட்டி பகீர் தகவலை வெளிக்காட்டியுள்ளது. சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அமைச்சர் பேசியதாவது;

திமுகவில் யாரை நியமித்தாலும் அந்த கட்சியில் பூகம்பம் வெடிக்கும். கிட்டத்தட்ட 47 வருடத்திற்கும் மேலாக திராவிட இயக்க அரசியலின் மூத்த தலைவராகவும், திமுகவின் பொதுச் செயலாளராகவும் அன்பழகன் இருந்தார். அவர் வகித்த பதவியை பற்றி யாரும் எதுவும் கூறுவதில்லை, ஆனால் அவரை முனைவர் என்றும் இனமான பேராசிரியர் என்று அக்கட்சியினர் சொல்வதுண்டு.

அன்பழகன் எப்போது இனமான பேராசிரியராக இருந்தார்.? பச்சையப்பன் கல்லூரியில் துணை பேராசிரியராக தானே இருந்தார். என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறுவார் என்று அமைச்சர் உதயகுமார் தனது பேட்டியில் கூறியுள்ளார். தற்போது திமுகவின் பொதுச் செயலாளராக யாரை நியமிக்கப் போகிறீர்கள்? என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.

திமுக புதிய பொதுச் செயலாளராக திமுக பொருளாளர் துரைமுருகனை நியமிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

author avatar
Jayachandiran