ராஜேந்திர பாலாஜி ஒழிக! விருதுநகரில் எதிர்க்கட்சித் தலைவர் முன்பு ஏற்பட்ட கோஷ்டி மோதல் காற்றில் பறந்த எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனை!

0
74

கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது அந்த சமயத்தில் புதிதாக தொடங்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் ,ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதுதொடர்பாக சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது மக்களின் அடிப்படையில் விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் உடனடியாக இந்த ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

ஆகவே இந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக பணியாற்றி வருகிறது. கடந்த 15-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வது தொடங்கி கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி வரை நடைபெற்றது.

இதனால் இந்த ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளும் மிகத்தீவிரமாக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மாவட்டம் தோறும் சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோரை சந்தித்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக அறிவுரைகளை வழங்கி வருகின்றார்.

இந்த சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த இவை காற்றில் பறக்கவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்பு அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு இருக்கிறது. திருநெல்வேலி சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு சாத்தூர் அருகே முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். இரண்டு தரப்பிற்கும் இடையில் இதற்கு முன்னரே தகராறு இருந்து வந்த சூழ்நிலையில், நேற்றையதினம் அதனை எடப்பாடி பழனிச்சாமி முன்பு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தொண்டர்கள் வரவேற்று கொண்டிருந்த சமயத்தில் கூட்டத்தில் இருந்த ஒரு நபர் ராஜேந்திர பாலாஜி ஒழிக என்று கோஷம் எழுப்பினார் இதன் காரணமாக, ஆத்திரமடைந்த ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள் எதிர் தரப்பினரை தாக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் நிகழ்ச்சி கைகலப்பாக மாறி போனது. கைகலப்பில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த மோதல் குறித்து அதிமுகவின் கிளைச் செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.