9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? அதிமுகவால் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்படவிருக்கும் சிக்கல்!

0
68

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து இந்த ஒன்பது மாவட்டங்களுக்கும் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்து பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் இந்தப் அந்தந்த மாவட்ட உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் இறங்கியது தேர்தல் ஆணையம். இந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் எனவும், வேட்புமனுத்தாக்கல் 15ஆம் தேதி ஆரம்பித்து 22ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்படியான சூழ்நிலையில், ஒன்பதாவது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டமாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டமாக நடத்துவது கள்ள ஒட்டு போடுவதற்கான வழிவகை செய்து விடும் என அதிமுக அந்த மனுவில் தெரிவித்து இருக்கிறது.

அதோடு உள்ளாட்சித் தேர்தலுக்கு மத்திய அரசின் பணியாளர்களை தேர்தல் பார்வையாளராக நியமனம் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கடந்த 14ம் தேதி தேர்தல் ஆணையத்தில் கொடுத்த மனுவை பரிசீலனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருக்கிறார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மிக விரைவில் விசாரணைக்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.