நடிகர்களுக்கு சோறு போடுங்கள்! தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் – சத்யராஜ் காட்டம்

0
86

நடிகர்களுக்கு சோறு போடுங்கள்! தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் – சத்யராஜ் காட்டம்

 

ஈரோட்டில் தற்கொலை தடுப்பு சேவை தொடங்கபட்டுள்ளது.இந்த சேவை தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த சத்யராஜ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள். நாங்கள் ஒன்றும் மார்க்ஸோ, பெரியாரோ, அம்பேத்கரோ அல்ல என காட்டமாக பேசியது அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், தற்கொலை தடுப்பு என்பது இன்றைக்கு மிகவும் அவசியமான விஷயம். தற்கொலைக்கு முக்கிய காரணம் வறுமை மற்றும் உறவு சிக்கல். அதாவது கணவன்-மனைவிக்குள்ளும், தந்தை-மகனுக்குள்ளும் ஏற்படும் பிரச்சினைகள். மேலும் பல விதமான மூட நம்பிக்கைகளால் ஏற்படுகிற மன அழுத்தம். அதேபோல் சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் உள்ளிட்டவைகளால் ஏற்படுகின்ற மன அழுத்தம். மேலும், மனநலம் பாதித்த சமூகம் தருகின்ற மன அழுத்தம், பெண் அடிமைத்தனத்தால் ஏற்படுகிற அழுத்தம் போன்றவை ஆகும். இதில், பொருளாதார சிக்கல் என்பது முக்கியமான இடத்தை வகிக்கிறது என்று பேசியுள்ளார்.

 

 

மேலும் அவர், நீட் தேர்வு சம்பந்தமாக நடந்த தற்கொலை நிகழ்வு மிகவும் மனதைக் காயப்படுத்திய விஷயம் என்றார். நீட் தேர்வு கூடாது என்ற எண்ணத்தில் உள்ளவன் நான். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு நீட்தேர்வு என்பது கஷ்டம். ஒரு முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்குவது ரொம்ப முக்கியம். டாக்டர், வழக்கறிஞர்களின் குழந்தைகளை அதே பதவிக்கு கொண்டு வருவது மிகவும் எளிது. ஆனால், படிக்கத் தெரியாத பெற்றோரின் குழந்தைகள் அவர்கள் படித்து முன்னுக்கு கொண்டு வருவது என்பது மிகவும் முக்கியம்.

 

 

நம் உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மருத்துவர்களிடம் செல்கிறோம். ஆனால், மனநலம் குன்றினால் மட்டும் மருத்துவர்களிடம் செல்வதில்லை. உலகில் யாரும் புத்திசாலி இல்லை. சமீப காலமாக தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், எம்ஜிஆரின் பாடல் கேட்பேன். அதன்மூலமாக நிறைய தெளிவு கிடைக்கும்.

 

 

பெரியார், அம்பேத்கர் எல்லாம் சமூக மருத்துவர்கள் மட்டும் அல்ல சிறந்த மன நல மருத்துவர்கள் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.

 

இதனையடுத்து தொடர் தற்கொலைகள் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நடிகர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என நினைத்து கொண்டுள்ளனர்.சினிமா நடிகர்களை ஐன்ஸ்டீன் அளவுக்கு நினைத்து கொண்டுள்ளீர்கள். ஆனால், நடிகர்களுக்கு நடிப்பை தவிர வேறு எதுவும் தெரியாது. ஸ்டார்ட், கேமரா,ஆக்சன் சொன்னால் நடிப்பவர்கள்.நடிகர்களுக்கு சோறு போடுங்கள் ஆனால் எதற்கு தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள்.நாங்கள் மார்க்ஸோ, பெரியாரோ, அம்பேத்கரோ அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 

இதற்கு பின்னும் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி கேட்க அதற்கு, எனக்கு நான் தான் ராஜா,இந்த நிகழ்ச்சியை திசை திருப்பி வேறு எங்கோ கொண்டு செல்கிறீர்கள்,என்னிடம் வாயை பிடுங்க முடியாது என காட்டமாக பதிலளித்தார்.இதனையடுத்து இது அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது