ரஷ்யாவின் அதிரடி! உக்ரைனின் 4 பிராந்தியங்கள் இன்று ரஷ்யாவுடன் இணைப்பு!

0
75

உக்ரைனில் தன்னுடைய ராணுவத்தின் ஆதரவுடன் பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டிலுள்ள 4 பிராந்தியங்களை இன்று முறைப்படி தன்னுடைய நாட்டுடன் இணைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி போர் தொடுத்தது 7 மதங்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது.

ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைனிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் போரை தீவிரப்படுத்தும் விதத்தில் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே இருக்கின்ற டோனெட்ஸ்க், லூஹண்ஸ்க்,கெர்சான்,ஜபோரிஸ்யா உள்ளிட்ட 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டது.

இதற்காக இந்த பிராந்தியங்களில் மக்களின் கருத்துக்களை கேட்கும் வாக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த பிராந்தியங்கள் இன்று ரஷ்யாவுடன் இணைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நேற்று மாஸ்கோவில் தெரிவித்ததாவது, மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இந்த பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்க பொதுமக்கள் ஆதரவு வழங்கியுள்ளார்கள்.

ஜபோரிசியாவில் 93 சதவீதம் பேரும், கெர்சானில் 87 சதவீதம் பேரும், லுஹன்க்சில் 98 சதவீதம் பேரும், டொனட்ஸ்கில் 99 சதவீதம் பேரும் ரஷ்யா உடன் இணைப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து மாஸ்கோவில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படுவதை ரஷ்ய அதிபர் புட்டின் அறிவிப்பார். அப்போது இந்த பிராந்தியங்களின் நிர்வாகத்தினர் முறைப்படி ஒப்பந்தம் செய்யவுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர் இந்த வாக்கெடுப்பை புறக்கணிப்பதாகவும், ரஷ்யாவின் இணைப்பு முயற்சியை அங்கீகரிக்கப் போவதில்லை எனவும் இந்த நாடுகள் தெரிவித்துள்ளனர்.