“ரோஹித் ஷர்மா கேப்டன்சியில் இந்த விஷயங்கள் பிரச்சனையாக உள்ளன…” ஆகாஷ் சோப்ரா கருத்து!

0
94

“ரோஹித் ஷர்மா கேப்டன்சியில் இந்த விஷயங்கள் பிரச்சனையாக உள்ளன…” ஆகாஷ் சோப்ரா கருத்து!

இந்திய அணி டி 20 போட்டி தொடரின் முதல் போட்டியில் ஆஸி அணியிடம் தோற்றதை அடுத்து இப்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்திய அணிக்கு இந்த ஆண்டில் இருந்து அனைத்து விதமான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் ரோஹித் ஷர்மா. இந்நிலையில் இப்போது அவர் தலைமையில் டி 20 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் அவர் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து பேசியுள்ள இந்திய வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா “”ரோஹித் ஷர்மாவின் தீவிர தாக்குதல் அணுகுமுறை எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை. அவர் தன்னைத்தானே எளிதாக அவுட் ஆக்கி கொள்கிறார். அவர் 40 பந்துகளுக்கு பேட்டிங் செய்தால் 75 ரன்கள் எடுப்பது நிச்சயம். ஆனால் இவ்வளவு நேரம் பேட் செய்ய அவர் தனக்கு அந்த வாய்ப்பை வழங்குகிறாரா? அவர் ஒரு ஸ்பெஷல் ப்ளேயர், தன்னை உள்வாங்கிக்கொள்ள சிறிது நேரம் எடுக்க வேண்டும்.

மேலும் அவரின் கேப்டன்சி அனுகுமுறையும் குழப்பமானதாக உள்ளது. அவர் சமநிலையான அணியை தேர்வு செய்ய மறுக்கிறார். சில போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் அதிகம் தேவை என நினைக்கிறார். சில போட்டிகளில் பவுலர்கள் அதிகம் தேவை என நினைக்கிறார். ஆனால் ஆல்ரவுண்டர்களை சரியாக பயன்படுத்த வில்லை. அதனால் தான் சில போட்டிகள் தோல்வியில் முடிகின்றன” எனக் குற்றம் சாட்டும் விதமாக கூறியுள்ளார்.