4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

0
143
Dead
Dead

4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தனது 4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து இளம் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தொளசம்பட்டி ஓலைப்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயபாலன் என்பவருடைய மகன் கணபதி. 30 வயதாகும் இவர் அமரகுந்தி கரட்டுபட்டி அரசு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், மல்லிக்குட்டை பரியம்பட்டி பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகள் ஸ்ரீதேவி (25) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான இவர்களுக்கு சித்தேஸ்வரன் (4) என்ற மகனும் இருக்கிறார்.

இந்நிலையில் ஸ்ரீதேவி அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். மேலும் அவருக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி ஸ்ரீதேவி தனது தந்தை வீட்டிற்கு சென்று இதற்காக சிகிச்சை பெற்று கொண்டு பின்னர் உடல்நலம் சரியானவுடன் அவரது கணவர் அவரை, அவர்களது வீட்டுக்கு அழைத்து செல்வதும் வழக்கமாகி தொடர்ந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணபதி, வழக்கம் போலவே அவரது மாமனார் வீட்டுக்கு சென்று தனது மனைவி மற்றும் மகனை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அதனைத்தொடர்ந்து நேற்று காலை அவர் தனது மாமனாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு வைகுண்ட ஏகாதசியையொட்டி நங்கவள்ளியில் உள்ள கோவிலுக்கு சென்று வருகிறேன், நீங்கள் தனது வீட்டிற்கு வந்து ஸ்ரீதேவி மற்றும் மகனை பார்த்து கொள்ளும்படியும் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவரது மாமனார் மாரியப்பன் ஓலைப்பட்டியில் உள்ள மருமகன் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் கூறியது போல மகள் மற்றும் பேரக்குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தில் அவர் தேடி உள்ளார். பின்னர் பக்கத்து வீட்டில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது ஸ்ரீதேவி தோட்டத்து கிணற்று பக்கம் குழந்தையுடன் சென்றது தெரிய வந்துள்ளது.

உடனே அங்கு சென்று பார்த்தபோது அவரது மகள் ஸ்ரீதேவி கிணற்றில் பிணமாக மிதந்ததை கண்டு அவர் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஸ்ரீதேவியின் உடலை அவர் கிணற்றில் இருந்து மீட்டார்.

ஆனால் எவ்வளவு தேடியும் பேரனை காணவில்லை. எனவே பேரக்குழந்தையும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்பதால் அவர் ஓமலூர் தீயணைப்பு படையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஓமலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் மூழ்கிய சிறுவன் சித்தேஸ்வரனின் உடலையும் மீ்ட்டனர்.

 

இதையடுத்து தொளசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீதேவி மற்றும் சித்தேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இளம்பெண் கிணற்றில் சடலமாக கிடந்த இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முறையாக விசாரணை செய்தனர்.அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஸ்ரீதேவி தனது 4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும் அவர் எதற்காக தற்கொலை முடிவை எடுத்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு பள்ளி ஆசிரியரின் மனைவி, தனது 4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.