சிங்கம்புணரி அருகே மழை வேண்டி விவசாயம் செழிக்க நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழா!!

0
131
#image_title

சிங்கம்புணரி அருகே மழை வேண்டி விவசாயம் செழிக்க நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழா!!

குடும்பம் குடும்பமாக கண்மாய்க்குள் இறங்கி போட்டி போட்டு கிலோ கணக்கில் மீன்களை அள்ளிய கிராம மக்கள்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஐநூத்திப்பட்டி கிராமத்தில் ஐநூத்திகண்மாய் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய கண்மாய் ஆகும்,இந்த கண்மாயில் இருந்து 700க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்கள் பாசன வசதி பெறுகிறது.

நெல் அறுவடை பணிகள் முடிவுற்று கோடை காலம் துவங்கி வெயில் வாட்டிவதைக்கும் நிலையில் தண்ணீர் வேகமாக குறையத் தொடங்கியது. ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி மழை வேண்டியும், மீண்டும் விவசாயம் செழிக்கவும் கிராம மக்கள் ஒற்றுமையாக மீன்களை பிடித்து செல்ல சுற்றுவட்டார கிராம மக்களுக்கு அறிவிப்பு செய்தனர்.

அதனை தொடர்ந்து பிரான்மலை, குமரத்தகுடிப்பட்டி, வையாபுரிபட்டி, செல்லியம்பட்டி, வேங்கைபட்டி,அணைக்கரைப்பட்டி,காளாப்பூர் உள்பட 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலை முதலே இருசக்கர வாகனங்களில் சாரை சாரையாக கண்மாயை சுற்றி அனைத்து சமுதாய மக்கள் ஒன்று கூடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊத்தா, கச்சா, கொசுவலை, அரிகூடை உள்ளிட்ட உபகரணங்களுடன் மீன்களை பிடிக்க கொக்கு காத்திருப்பது போல் காத்திருந்தனர்.

அங்கு வந்த ஊர் முக்கியஸ்தர்கள் ஒற்றுமையை பறைசாற்றும் பாரம்பரிய மீன்பிடி திருவிழாவை வானவெடி போட்டு துவக்கி வைத்தனர்.வெடி வெடித்த உடனே கண்மாயை சுற்றி காத்திருந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் மீன்களை அள்ள துள்ளி குதித்து கண்மாய்க்குள் இறங்கினர்.

ஊத்தா கச்சா கொசுவலைகளை கொண்டு மீன்களை சல்லடை போட்டு அளசியதில் விரால், சிலேபி, கெண்டை உள்ளிட்ட அதிக ருசியான நாட்டுவகை மீன்கள் ஏராளமாக தாராளமாக சிக்கின, விடுமுறை நாள் என்பதால் ஒற்றுமையாக குடும்பம் குடும்பமாக சென்று கண்மாய்க்குள் மீன்களை சல்லடை போட்டு அள்ளிச் செல்வது இந்த பகுதிகளில் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.

இந்த கண்மாயில் மீன்பிடித்த அனைவருக்கும் கெண்டை பொடி மீன்கள் சுமார் 2 கிலோ முதல் 5 கிலோவிற்கு மேல் கிடைத்ததால் சந்தோசமாக வீடு திரும்பினர்.

author avatar
Savitha