கல்வி பயில்வதை தடுக்க செய்த அதிர்ச்சி செயல்! 100 மாணவிகளுக்கு விஷம் வைத்த கொடூரம்! 

0
218
#image_title

கல்வி பயில்வதை தடுக்க செய்த அதிர்ச்சி செயல்! 100 மாணவிகளுக்கு விஷம் வைத்த கொடூரம்! 

ஈரானில் 100 பெண்களுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரான் தலைநகரான  டெஹ்ரான் அருகே  கோம் நகரில் சென்ற ஆண்டு நவம்பர் முதல் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவிகள் பலருக்கு அடுத்தடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட ஏராளமான  மாணவிகள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மாணவிகளின் உடலில் நஞ்சு கலந்து இருந்தது தெரிய வந்தது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய  நிலையில், கடந்த மாத இறுதியில் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஈரான் சுகாதாரத் துறை துணை மந்திரி யூனுஸ், மாணவிகளுக்கு வேண்டுமென்றே விஷம் கொடுக்கப்பட்ட அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

மாணவிகள் கல்வி பயிலுவதை தடுப்பதற்காக, மத அடிப்படைவாதிகளால் விஷம் கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனால் இந்த விவகாரம்  சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஈரான் அரசு விசாரணையை தொடங்கியது. ஆனாலும் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. 

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 100 மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்து மாகாணங்களில் உள்ள 30க்கு ஏற்பட்ட பெண்கள் பயிலும் பள்ளிகளை குறி வைத்து  இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவிகள் பயிலும் பள்ளிக்கூடங்களில் முன்பு பெற்றோர்கள் பதற்றத்துடன் கூடி நிற்பதும், பாதிக்கப்பட்ட மாணவிகளை ஆம்புலன்ஸில் ஏற்றி சொல்வதும் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இதனால் பெண்களின் கல்வி உரிமையை பறிக்கும் நோக்கில் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக அரசுக்கு எதிராக தலைநகர் டெக்ரான் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பெற்றோரும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேற்கு டெஹ்ரானில் உள்ள கல்வி அமைச்சகம் முன்பு நூற்றுக்கணக்காக திரண்ட மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பழமைவாதிகள் மற்றும் மத அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை இதுவரை எடுக்காத அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கடந்த ஆண்டு ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மூன்று மாதங்களுக்கு மேல் போராட்டம் நடைபெற்று ஈரானை ஸ்தம்பிக்கு வைத்து நிலையில் தற்போது மீண்டும் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேசிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி இது ஒரு வெளிநாட்டு சதி என்றும் இதன் மூலம் நமது எதிரிகள் பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் இடையே பாதுகாப்பின்மையை ஏற்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தார். ஆனால் எதிரிகள் யார் என்று கூறாத நிலையில் எப்போதும் இது போன்ற சம்பவங்களில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலை தான் ஈரான் அரசு குற்றம் சாட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.