8ஆண்டு காலமான காதல்! இறுதியில் இப்படி ஒரு முடிவா?

0
128
8-years-of-love-is-this-a-decision-in-the-end
8-years-of-love-is-this-a-decision-in-the-end

கன்னியாகுமரி அருகே வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் தோவாளையை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (27). எம்.ஏ., பட்டதாரியான இவரும், அதேப் பகுதியைச் சேர்ந்த வேறு சமூகப் பெண்ணும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இருவரும் 8 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, அவசர அவசரமாக அந்த பெண்ணுக்கு வேறு பக்கம் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வந்துள்ளது.

இதனிடையே, தன் வீட்டில் வந்து பேசுமாறு சுரேஷின் குடும்பத்தினரிடம் அந்தப் பெண் கூறியதாகவும், கடந்த 7ம் தேதி பெண் வீட்டார் பேச்சுவார்த்தை நடத்த காவல்நிலையத்திற்கு அழைத்ததாகவும் கூறி, சுரேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இதைத் தொடர்ந்து, நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், சந்தேகமடைந்த உறவினர்கள் காவல்நிலையம் சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர் இல்லாத நிலையில், ஊர் முழுவதும் தேடியுள்ளனர்.

இந்த சூழலில், சுரேஷின் பைக், அக்கிராமத்தின் தோட்டப்பகுதியில் இருப்பதை கண்ட அவர்கள், அங்கு சென்று பார்த்த போது, கழுத்து மற்றும் கைப்பகுதிகளில் சுரேஷ் ரத்தக் காயங்களுடன் சுருண்டு விழுந்து கிடந்துள்ளார்.

இதையடுத்து, அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது சம்பந்தமாக பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் தகவலறிந்த சுரேஷ்குமாரின் பெற்றோர்கள் சுரேஷ்குமாரின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உடலை வாங்க மறுத்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும், இந்த வழக்கை தற்கொலை வழக்காக மாற்றவும் பெண் வீட்டார் முயற்சிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

author avatar
Parthipan K