தடுப்பூசி போட்ட குழந்தை நேர்ந்த சோகம்!மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!

0
79

தடுப்பூசி போட்ட குழந்தை நேர்ந்த சோகம்!மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!

திருவண்ணாமலை அருகே தடுப்பூசி முகாமில் குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் உடல்நலமில்லாமல் குழந்தை இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனரான சீரஞ்சீவி. இவரது மனைவி தமிழரசி. இத்தம்பதிகளுக்கு லித்தீஷ் என்ற அழகான 5 மாதக் குழந்தை உள்ளது. குழந்தையை புதுப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்நிலையில் தடுப்பூசி போட்டதில் இருந்தே குழந்தை மிகவும் சோர்வாகவும் ஆகாரம் எதுவும் எடுத்துக் கொள்ளாமலும் இருந்துள்ளது. இதைப் பார்த்த பெற்றோர் தடுப்பூசியின் வீரியம் காரணமாக இப்படி இருக்கலாம் என நினைத்துள்ளனர். மறுநாள் சரியாகாவிட்டால் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என நினைத்து தூங்க வைத்துள்ளனர். ஆனால் காலையில் எழுந்து பார்த்த போது குழந்தை அசைவற்று உடல் ஜில்லிட்டுக் கிடந்துள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிரஞ்சீவியும் தமிழரசியும் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து சென்றுள்ளனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லியுள்ளனர். இதைக் கேட்ட அவர்களுக்கு தலையில் இடியே விழுந்த மாதிரி இருந்துள்ளது.

இந்த விஷயம் அறிந்த உறவினர்கள் தடுப்பூசி போட்டாததால்தான் குழந்தை இறந்ததாக கூறி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த தகவல் அறிந்து வந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி முறையான விசாரணை நடத்தப்படும் என சொல்லியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K