முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34வது நினைவு தினம்! அதிமுகவினர் நினைவிடத்தில் அஞ்சலி!

0
92

அதிமுகவின் நிறுவனரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 34வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அவருடைய நினைவிடத்தில் பலர் அஞ்சலி செலுத்தியிருந்தார்கள் .

இந்த நிலையில், அவருடைய நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இருக்கின்ற எம்ஜிஆரின் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் நேற்று காலை மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக சொல்லப்படுகிறது.

அதேபோல அவர்களுடன் கட்சியின் அவைதலைவர் தமிழ்மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கேபி முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, எஸ் பி வேலுமணி, தங்கமணி, கே பாண்டியராஜன், ஜெயகுமார், அமைப்புச் செயலாளர்கள் ஜேசிடி பிரபாகர், பொன்னையன் மனோஜ் பாண்டியன், இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன், துணை செயலாளர் ஈசி சேகர் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.

அத்துடன் பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் ஏ சி சண்முகம், செயல் தலைவர் ரவிக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர் எஸ் டி ராமச்சந்திரன், மாநில துணைத் தலைவர் சேதுராமன், மாவட்ட செயலாளர் சிவ ராஜசேகரன், உள்ளிட்டோரும் திரைப்பட இயக்குனர்கள் கே பாக்யராஜ், அனுமோகன், ஸ்ரீரங்கநாதன், நாஞ்சில் பிசி அன்பழகன், உட்பட திரையுலகை சார்ந்தவர்களும் எம்ஜிஆரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலர் கருப்பு நிற உடையை அணிந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவின் சார்பாக நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ், உள்ளிட்டோர் முன்னிலையில் வைகைச்செல்வன் உறுதிமொழியை வாசிக்க அதிமுகவினர் எல்லோரும் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்கள்.

எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு அவருடைய நினைவிடத்திற்கு ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மற்றும் எம்ஜிஆர் விசுவாசிகள் தனித்தனியாகவும், குடும்பமாகவும், குழுக்களாகவும், அடுத்தடுத்து வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியவுடன் அருகில் இருக்கின்ற ஜெயலலிதாவின் நினைவிடத்தை பார்வையிட்டு சென்றதாக சொல்லப்படுகிறது.

தேமுதிகவின் சார்பாக சென்னை கோயம்பேட்டில் இருக்கின்ற கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தந்தை பெரியார் மற்றும் எம்ஜிஆர் உருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் கட்சியின் துணைச் செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றதாக தெரிகிறது.

எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் லதா ராஜேந்திரன் மற்றும் சுதா விஜயகுமார் ,நடிகர் தீபன் ஜானகி அம்மாவின் சகோதரர் மகள் கீதா எம்ஜிஆர் இல்லத்தின் நிர்வாகி குமாரர் ராஜேந்திரன் உள்ளிட்ட எம்ஜிஆரின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மெரினா கடற்கரையில் இருக்கின்ற அவருடைய நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

எம்ஜிஆரின் 34வது நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருக்கின்ற கிராமங்களில் எல்லாம் நேற்று அவருடைய நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு அதற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் ஆங்காங்கே இலவசமாக உணவும் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு மத்திய கால்நடை பால்வளம் மற்றும் மீன்வளத் துறை இணை அமைச்சர் முருகன் தன்னுடைய வலைப்பதிவில் திரையுலகின் தலைசிறந்த நடிகராக தனக்கென்று தனி தடம் பதித்து அரசியலில் ஈடுபட்டு பொதுமக்களுக்காக பணிகள் செய்து மக்களால் என்றென்றும் போற்றப்படும் எம்ஜிஆரை நினைவு கொள்வோம் என்று கூறியிருக்கிறார்.

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் வெளியிட்டிருக்கின்ற தன்னுடைய வலைதள பதிவில் கலையின் மூலமாக கிடைத்த பிரபலத்தை சமூக வெளியிலும், அரசியல் வெளியிலும் சிறப்பாக செயல்பட பயன்படுத்த இயலும் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுகளில் தனித்துவமிக்க எம்ஜிஆரின் நினைவு நாளில் அவருடைய வெற்றிகளை நினைவுகூர்வோம் என்று தெரிவித்திருக்கிறார்.