சென்னை பெருநகர் பகுதியில் ஒரே நாளில் பெய்த 23 சென்டிமீட்டர் கனமழை!

0
93

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் விடாமல் கொட்டி தீர்த்த கன மழையால் ஊரெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டு இருக்கிறது. நேற்று அதிகாலை வரையில் ஒரே நாளில் 23 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது.

வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னையில் இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஆரம்பித்த கனமழை நேற்று பிற்பகல் வரை இது தொடர்ந்து பெய்து வந்தது.

இதன் காரணமாக, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னையை ஒட்டிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. நேற்று காலை 8.30 மணியின் நிலவரப்படி தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தாம்பரம் மாநகராட்சியில் 23 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. மற்ற இடங்களை பொருத்தவரையில் என்னூர் பகுதியில் 21 சென்டிமீட்டர், சோழவரம் 22 சென்டிமீட்டர், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், உள்ளிட்ட பகுதிகளில் 18 சென்டிமீட்டர், மாமல்லபுரம், நுங்கம்பாக்கம், 17 சென்டிமீட்டர், டிஜிபி அலுவலகம், பெரம்பூர், 16 செண்டிமீட்டர், தாமரைபாக்கம், அம்பத்தூர், எம்ஜிஆர் நகர், எம்ஆர்சி நகர், உள்ளிட்ட பகுதிகளில் 15 சென்டிமீட்டர், சென்னை விமான நிலையம், தரமணி, அண்ணா பல்கலை கழகம், அயனாவரம், உள்ளிட்ட பகுதிகளில் 14 சென்டிமீட்டர் என்கின்ற அளவில் மழை பதிவாகி இருக்கிறது. செம்பரம்பாக்கம், பொன்னேரி, வில்லிவாக்கம், தாம்பரம், விமானப்படை, உள்ளிட்ட பகுதிகளில் 13 சென்டிமீட்டர், சத்யபாமா பல்கலைக்கழகம் கேளம்பாக்கம், திருப்போரூர், தண்டையார்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் 12 சென்டி மீட்டர் மழையும், பூந்தமல்லி, திருக்கழுகுன்றம், காட்டு குப்பம், மேற்கு தாம்பரம், ஆகிய பகுதிகளில் 11 சென்டி மீட்டர் மழையும், செங்கல்பட்டு, இந்துஸ்தான் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், செய்யூர், மரக்காணம், ஊத்துக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது.

நேற்று காலை முதல் மாலை 5.30 மணி வரை பெய்த மழையை பொருத்தவரையில் நுங்கம்பக்கம், சென்னை, உள்ளிட்ட பகுதிகளில் 6️ சென்டிமீட்டர் மழை மீனம்பாக்கம்,  என்னூர், காஞ்சிபுரத்தில் 4 சென்டி மீட்டர் மழையும், பதிவாகியிருக்கிறது. நேற்று இரவில் ஒரு சில பகுதிகளில் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் லேசான மழை பெய்ததாக  தெரிகிறது..