வசமாக மாட்டிக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவரின் ஆதரவாளர்! என்ன செய்யப்போகிறது லஞ்ச ஒழிப்புத்துறை?

0
65

தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையை கொண்டு அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறது. இந்த சோதனைகளின் மூலமாக தமிழகத்தில் அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சியில் திமுக இறங்கி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவை பொருத்தவரையில் ஆளுமை மிக்க தலைவர் இதுவரையில் அந்த கட்சிக்கு நியமிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. என்னதான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என நியமிக்கப்பட்டு இருந்தாலும் கூட மிகப் பெரிய ஆளுமை மிக்க தலைவராக அவர்களால் விளங்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.

எடப்பாடி பழனிச்சாமி திறமையானவர் தான் என்றாலும் கூட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அளவிற்கு அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அதிமுகவை தமிழகத்தில் பலவீனப் படுத்தும் முயற்சிகளை ஆளுங்கட்சியான திமுக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வலது கரமாக செயல்பட்டு வருபவர் என அறியப்படுபவர் தமிழக கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் இவருக்கு சொந்தமான 27 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் இவர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பார்வை பதிந்து இருக்கிறது. அது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்சமயம் இளங்கோவன் சேலத்தில் மாளிகையை போன்ற ஒரு பிரம்மாண்டமான வீட்டை கட்டி வருகிறார். அந்த வீட்டை பற்றி லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு ரகசியமாக தகவல் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே அந்த வீடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஆகவே இந்த விசாரணையின் முடிவில் இளங்கோவன் சிக்கிக் கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் அவருடைய சொத்துகள் வருமானம் தொழில் என்று எல்லாவற்றைப் பற்றியும் காவல்துறையினர் துருவித்துருவி விசாரணை நடத்தி வந்திருக்கிறார்கள். அதோடு திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வருமானத்திற்கு அதிகமாக 131 சதவீதம் சொத்துக்கள் சேர்த்து வைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கிட்டு இருக்கிறது. இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.

முதல் தகவல் அறிக்கையில் இளங்கோவன் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பதவியில் இருந்த சமயத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி தன்னுடைய பெயரிலும் தன்னுடைய மகன் பெயரிலும் சொத்துக்களை குவித்து இருப்பதாக அந்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டில் இளங்கோவனின் சொத்து மதிப்பு 30 லட்சம் ரூபாயாக இருந்த சூழ்நிலையில், 2020ஆம் ஆண்டில் அந்த சொத்தின் மதிப்பு 5.6 கோடியாக அதிகரித்து உள்ளது.

ஆனால் அவருடைய மாத வருமானத்தை வைத்து கணக்கிட்டால் சொத்து மதிப்பு 2.98 கோடி ரூபாய் மட்டுமே இருந்திருக்க வேண்டும் எனவே பதவியில் இருந்த காலகட்டத்தில் 5.30 கோடி சொத்துக்களை அவர் சேர்த்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதோடு வருமானத்திற்கு அதிகமாக 131% சொத்துக்களை சேர்த்து இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக 131சதவீத சொத்துக்களை சேர்த்ததற்கு இடையில் மாளிகை போன்ற வீடு சேர்ந்து கொண்டதால் லஞ்ச ஒழிப்புத்துறை பார்வை அவர் மீது மிகவும் வலுவாகவே விழுந்ததாக சொல்லப்படுகின்றது. இளங்கோவன் மற்றும் அவர் தொடர்புடைய 27 இடங்களில் தற்சமயம் சோதனைகள் நடந்து வருகிறது.