கள்ளக்குறிச்சியில் 1000 கோடி ரூபாய் செலவில் கால்நடை பூங்கா! விவசாயிகளுக்கு உயர்ரக பசுக்கள்! முதல்வர் அறிவிப்பு..!

0
78

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில தினங்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. இந்நிலையில் பிற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக வருகிறது. கொரோனா தடுப்பு, வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லை, திண்டுக்கல், மதுரை, சேலம் போன்ற மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மற்றும் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மலைவாழ் உறைவிட பள்ளி கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார். அப்போது கூட்டத்தில் பேசிய முதல்வர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. உலக நாடுகளே அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்ற இந்த தருணத்தில் தமிழகத்திலும் இந்த கொரோனா வைரஸ் பரவி இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு அறிவிக்கின்ற அனைத்து ஆலோசனையையும் நம் மாவட்ட நிர்வாகமும் மக்களும் சேர்ந்து சிறப்பான முறையில் பின்பற்றி வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம் என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன் என்றார்.

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பிரதானமாக கொண்டு உருவாகப்பட்டுள்ளது. இங்கு சட்டத்துறை அமைச்சர் வேண்டுகோளுக்கு இணங்கி மற்றும் ஏழை எளிய மக்களின் நன்மைக்காக மாவட்டம் தோற்றுவிக்கபட்ட ஆறே மாதத்தில் புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது என்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்றார். மேலும் ஊட்டியில் ரூ.48 கோடியில் கால்நடை விந்தணு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது. கால்நடைப்பூங்கா மூலமாக உயர்ரக பசுக்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும், கள்ளக்குறிச்சியில் 1000 கோடி ரூபாய் செலவில் கால்நடைப்பூங்கா அமைக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட மக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

author avatar
Parthipan K