ரிசர்வ் வங்கி அறிவித்த 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

0
62
Punjab National Bank
Punjab National Bank

ரிசர்வ் வங்கி அறிவித்த 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

உலக அளவில் வளரும் பொருளாதாரத்திற்கேற்ப வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், மேலும் உலக அளவில் பெரிய வங்கிகளாக உருவாக்கவும் சமீபத்தில் பொதுத்துறை வங்கிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய வங்கிகள் பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டன.

இந்நிலையில் மேலும் 10 பொதுத்துறை வங்கிகள் ஒன்றாக இணைக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் இந்த 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பானது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, அலகாபாத் வங்கியானது இந்தியன் வங்கியுடன் இன்று இணைகிறது. இனிமேல், அலகாபாத் வங்கிக்கிளைகள் அனைத்தும் இந்தியன் வங்கிக் கிளைகளாக செயல்படும்.

அதே போல் கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைகின்றன. அதனால், கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கிக்கிளைகள் இதற்கு பிறகு யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளைகளாக செயல்படும். மேலும் சிண்டிகேட் வங்கி இன்று முதல் கனரா வங்கியுடன் இணைகிறது. இனிமேல் சிண்டிகேட் வங்கிக்கிளைகள் அனைத்தும் கனரா வங்கிக் கிளைகளாக செயல்படும்.

யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கி ஆகியவை வங்கிகள் இன்று முதல் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைகின்றன. மேற்கண்ட இந்த 2 வங்கிக் கிளைகளும் இனிமேல் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளைகளாக செயல்படும். இந்த இணைப்பின் மூலமாக 10 பொதுத்துறை வங்கிகள் இணைந்து 4 வங்கிகளாக உருவாகிறது.

இந்த 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு தொடர்பான அறிவிப்பாணையை ஏற்கனவே ரிசர்வ் வங்கியானது வெளியிட்டுள்ளது. இந்த 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பைத் தொடர்ந்து, தற்போது நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைகிறது.

மேலும் இத்துடன், பாரத ஸ்டேட் வங்கியை தொடர்ந்து நாட்டின் 2 வது பெரிய வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி உருவெடுக்கிறது. அதனையடுத்து பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை அதற்கு அடுத்தடுத்த இடங்களை பிடிக்கின்றன.