10 சதவீத இடஒதுக்கீடு இங்கு செல்லாது – தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு 

0
71
K. Ponmudy
K. Ponmudy

10 சதவீத இடஒதுக்கீடு இங்கு செல்லாது – தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு

அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்படும் என்றும், இந்த நியமனங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என்றும் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

சென்னையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அரசுக் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தோம். இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, டிஆர்பி மூலமாக அதற்கான உடனடியாக நடைபெறும். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு இந்த நியமனங்களில் செல்லாது.

கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு தொடர்பான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. காலியிடங்கள் உள்ள அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை உடனடியாக நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் வாய்ப்புள்ளது.

அதேபோல், கல்லூரிப் பேராசிரியர்களுக்கான இடமாற்ற கலந்தாய்வை நடத்தக் கோரி பலர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில், இந்த இடமாற்றத்துக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த கலந்தாய்வில் 5408 பேர் கலந்துகொள்ள தகுதியானவர்கள். தற்போது 3,000 காலியிடங்கள் இருக்கின்றன. கலந்தாய்வில் கலந்துகொள்பவர்கள் கேட்கின்ற இடங்கள் ஆன்லைன் மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும். ஒரே இடத்திற்கு இரண்டு பேர் விண்ணப்பித்தால், பணிமூப்பின் அடிப்படையில் இடமாற்றம் வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.