எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் கே.பாக்யராஜ் தேர்வு

0
73

எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் கே.பாக்யராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்று வடபழனியில் உள்ள இசையமைப்பாளர் சங்கத்தில் இதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர்.

அதில் எழுத்தாளர் சங்க தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ் மீண்டும் தேர்வாகியுள்ளார். இந்த தேர்தலில் பாக்கியராஜ் 192 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகளும் பெற்றனர்.

இதனையடுத்து 40 வாக்குகள் வித்தியாசத்தில் கே.பாக்யராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து அவர் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன் தமிழ்நாடு எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் கே.பாக்யராஜ் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் சர்கார், கோமாளி உள்ளிட்ட பல படங்களின் கதை தொடர்பான பிரச்சனைகளில் அவர் திறம்பட செயல்பட்டார் என திரைத்துறையை சார்ந்த பலரும் பாராட்டினர்.

குறிப்பாக சர்கார் படத்தின் கதை சர்ச்சையில் கே.பாக்யராஜ் உதவி இயக்குனர் பக்கம் நின்றார். அந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வரை சென்று உதவி இயக்குனருக்கு அவர் உறுதுணையாக இருந்தார். இந்த நிலையில் கே.பாக்யராஜின் இது போன்ற செயல்பாடுகள் குறித்து சங்கத்தில் சர்ச்சைகளும் வெடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.